Monday, March 5, 2012

காதலில் சொதப்புவது எப்படி?

அடிக்கடி முட்டிக்கொள்ளும் லட்சோப லட்ச காதலர்களின் சொதப்பல்களை எட்டு நிமிட குறும்படமாக எடுத்த இயக்குனர், அதை இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் இழுத்து அடைத்திருக்கிறார் கலகலப்பாக. அமலா பாலும் சித்தார்த்தும் லவ்வர்ஸ். ‘தங்கள் லவ் எப்படி ஸ்டார்ட் ஆச்சு?’ என்று கொடுக்கிற பேட்டியில் ஆரம்பிக்கிறது படம்.

'கேன்டீன்ல சந்திச்சோம். அப்ப இவங்க ரொம்ப சப்பியா இருப்பாங்க?'
'நான் அப்ப சப்பியா இல்ல'
'இல்ல இருந்தே. அதான் அப்ப உனக்கு அழகே'
'இப்ப நான் அழகா இல்லையா?'
'இல்லை, அது...'

-தொடர்கிற சண்டையில் சித்தார்த்தின் நெற்றியில் விழுந்து உடைகிறது கண்ணாடி கிளாஸ். இப்படி போகிற கதையில் ஏராளமான ஈகோவையும் நண்பர்களின் டமார் காதலையும் மிக்ஸ் பண்ணி, திகட்ட திகட்ட இளமை கதை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி மோகன். இறுதியில், 'சொதப்பாத காதல், காதலே இல்லைப்பா' என்கிற மெசேஜும். துறுதுறு மாணவன் கேரக்டருக்கு அம்சமாய் பொருந்துகிறார் சித்தார்த். ஆடியன்ஸிடம் சொல்லிக்கொண்டு கதையை நகர்ந்தும் அவர், அமலாவிடம் வழிவதாகட்டும், போனை வீட்டுக்குள் வைத்துவிட்டு அமலாவின் போன் காலுக்காகத் தவிப்பதாகட்டும் கிளைமாக்ஸில் உருகுவதாகட்டும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

மாணவி கேரக்டரில் அமலா. ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று சீரியஸாகி, சித்தார்த்துடன் சண்டைபோடும் இடங்கள் க்யூட். ஈகோவில் இருவரும் பேசாமல் இருக்க, தோழி சொன்னாள் என்று போன் பண்ணி, 'ஸாரி, அன்னைக்கு உன்னை சரியா புரிஞ்சுக்காம...' என்று சித்தார்த் சொல்ல, 'பரவாயில்ல. இப்பவாவது உன் தப்பை உணர்ந்தியே' என்று அமலா பேச, 'தப்பா...நான் என்ன தப்பு பண்ணினேன் உணர்றதுக்கு...' என்று சித்து சிடுசிடுக்க, தொடரும் சண்டையில் தியேட்டரில் அள்ளுகிறது அப்ளாஸ். அப்பாவும் அம்மாவும் டைவர்ஸுக்கு அப்ளை பண்ண, 'இங்க நான் ஒருத்தி இருக்கிறதையே மறந்துடுவீங்களா?' என்று கொதிக்கும்போது கலங்கவும் வைக்கிறார்.

அமலாவின் அப்பா சுரேஷ். மகளிடமே, அம்மா சுரேகா வாணிக்கான காதல் கடிதத்தை கொடுப்பது, பிறகு மனைவியுடன் டேட்டிங் செல்வது, கோயில் பின்னணியில் வரும் கமல்ஹாசனின் 'வளையோசை கல கலகலவென' பாடல்காட்சி என இதையும் காதல் எபிசோடாக்கியிருப்பது சுவாரஸ்யம். ஆனாலும் திணிக்கப்பட்ட காட்சியாகவே இருக்கிறது. சித்தார்த்தின் அப்பாவாக ரவி ராகவேந்தர். 'டேய், பேஸ்புக்ல யார்ரா, உங்கூட ஒரு பொண்ணு போட்டோ இருக்கு' என்று கேட்க, 'பிரண்ட்பா' என சொல்லும் சித்தார்த்திடம், 'பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கேன். அக்சப்ட் பண்ணு' என்பதும், துணிக்கடையில் விவகாரமான இடத்தில் அமலாவைப் பார்த்து பேச, அவரை சித்தார்த்தின் அம்மா சிவரஞ்சனி தள்ளிக்கொண்டு வருவதும் கலவர காமெடி. நண்பர்களாக வரும் விக்னேஷின் 'அண்ணா' காதலும் அடிக்கடி அட்வைஸ் பண்ணும் அர்ஜுனனின் அடிவாங்கும் லவ்வும் காமெடி ஏரியாவை அதிகப்படுத்துகின்றன.

'பாசத்தையும் சரி வெறுப்பையும் சரி, ஒரு பொண்ணுகாட்டுற மாதிரி வேற யாரும் காட்ட முடியாது', 'பொண்ணுங்க பெயின்டிங் மாதிரி. ஒரு ரூம்ல எங்கயிருந்து பார்த்தாலும் அந்த பெயின்டிங் நம்மை பார்க்கிற மாதிரிதான் இருக்கும். அதுமாதிரிதான் பொண்ணுங்களும். ஏன்னா, நமக்கு அதுதான் வேணும்' என்கிற ரீதியில் படம் முழுக்க வரும் வசனங்கள் நச் ப்ளஸ் டச். தமனின் இசையில், 'பார்வதி...' பாடல் ஒகே. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் லவ் துள்ளல்.

கேமராவை அடிக்கடி பார்த்து, 'இந்த பொண்ணுங்க இருக்காங்களே...' என்று சித்தார்த் அடிக்கும் லெக்சர் சலிப்பு. படம் முழுவதும் எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பதும் எந்தக் காட்சியும் மனதில் நிற்காததும் சொதப்பலாக இருந்தாலும் இந்த ரசனையான சொதப்பலை ரசிக்கலாம்.

No comments:

Post a Comment