Monday, March 5, 2012

அம்புலி 3D விமர்சனம்

1980-ம் ஆண்டு கிராமம் ஒன்றில் நடந்த திகில் கதை. அந்தக் கிராமத்து பெண் பொன்னி. இவளது மூத்த மகன் செங்கோடன். இரண்டாவதாக சந்திர கிரகணத்தின்போது ஓரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அது மிருகமும், மனிதனும் இணைந்த விநோத தோற்றத்தில் பிறக்கிறது. தாயின் வயிற்றிலிருந்து வந்த உடனேயே பிரசவம் பார்த்த மருத்துவச்சியை கொல்கிறது. கிராம மக்கள் அதை கொல்ல முயலும்போது காட்டுக்குள் ஓடுகிறது. தாய் தற்கொலை செய்து கொள்கிறாள். 150 ஆண்டுகள் வாழும் சக்தி படைத்த அந்த அம்புலி, காட்டுக்குள் மறைந்து மனிதர்களை வேட்டையாடுகிறது.

அருகில் இருக்கும் கல்லூரி மாணவன் அஜெய்யின் காதலி சனம், அந்தக் கிராமத்தில் வசிக்கிறாள். அவளைப் பார்க்க காட்டு வழியாக செல்லும் அஜெய்யும், அவனது நண்பன் ஸ்ரீஜித்தும் அம்புலியால் துரத்தப்படுகிறார்கள். அந்த அம்புலியை கண்டுபிடித்து அழிக்க, அது பற்றி ஆராய்கிறார்கள். அதே காட்டுக்குள் அம்புலியின் அண்ணன் செங்கோடன் (பார்த்திபன்) தனியாக வாழ்கிறான். அவன், கல்லூரி முதல்வரை கொன்று விட்டு சிறைதண்டனை அனுபவித்து திரும்பியவன் என்று விரியும் கதை ஏகப்பட்ட முடிச்சுகளுடன் கிளைமாக்ஸை நெருங்கிறது. படத்தின் ஹீரோ அஜெய்யும், நண்பன் ஸ்ரீஜித்தும் அம்புலியை தேடிச் செல்வது சுவாரஸ்யம். தம்பி ராமையாவுடன் சேர்ந்து காமெடியும் செய்கிறார்கள்.

ஹீரோயின் சனம் காதலிக்கவும், பாடவும் செய்கிறார். பார்த்திபன் மிரட்டுகிறார், திகிலூட்டுகிறார். கிளைமாக்சில் அம்புலியோடு ஆக்ரோஷமாக சண்டையும் போடுகிறார். அம்புலியாக நடித்திருக்கும் கோகுலின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நாத்திகராக வரும் ஜெகன்னாத் மக்களை உசுப்பேற்றுகிறார். சோளக்கொல்லைக் காடு, காட்டுப் பங்களா, பாழடைந்த கோவில் என ஆர்ட் டைரக்டர் ரெமியனின் உருவாக்கம் அருமை. அதை கதைக்கு ஏற்றபடி திகிலூட்டும் விதத்தில் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி. கதையோட்டத்தின் இடையே 3டி எபெக்ட்டை அவ்வப்போது உணர வைக்கிறார். நால்வர் கூட்டணியின் பின்னணி இசைதான் படத்துக்கு உயிர்.

மூடநம்பிக்கையை சாடிய இயக்குனர்கள், அதீத கற்பனையாக கதை சொல்லியிருப்பது முரண்பாடு. பெரும்பகுதி படம் சோளக்காட்டுக்குள்ளேயே சுற்றி வருவதால் அவ்வப்போது அலுப்பு தட்டுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்திபன் நல்லவரா கெட்டவரா என்பதில் பெரிய குழப்பம். நரமாமிசம் சாப்பிடும் மிருகமான அம்புலி பார்த்திபனை மட்டும் விட்டு வைப்பது எதனால்? என்கிற கேள்விகள் எழுந்தாலும் அம்புலியை ரசிக்கலாம்.

No comments:

Post a Comment