Tuesday, October 11, 2011

வேலூர் மாவட்டம் விமர்சனம்

தமிழ்திரை கண்டு கொள்ளாமல் இருக்கும் திறமையான நடிகர் நந்தா.ஈரம் நந்தாவை நவரசக் கலைஞனாக காட்டியது போல, வேலூர் மாவட்டம் நந்தாவை பஞ்ச் டயலாக்குகள் பேசாத நேர்மையான போலீஸ் அதிகாரியாக வார்த்திருக்கிறது.

ஒரு விவசாயக்கூலித்தொழிலாளி தன் மகனை ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக உருவாக்க நினைக்கிறார். ஆனால் ஊரே மதிக்கிற ஐபிஎஸ் அதிகாரியாக தேறி, டெல்லி போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று,

வேலூர் மாவட்டத்தில் பயிற்சி அதிகாரியாக பொறுப்பேற்கிறார். அந்த மாவட்டத்தை, ரவிடியிசம், சட்டம் ஒழுங்கில் முன் மாதிரி மாவட்டமாக மாற்றிக்காட்டுவதுதான் கதை. முத்துகுமார் ஐபிஎஸ் கதாபாத்திரத்துக்கு நந்தாவைத் தேர்வு செய்ததற்காக இயக்குனரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

நந்தாவின் கம்பீரமான ஆனால் மிகையில்லாத நடிப்புக்கு போலீஸ் யூனிஃபார்ம் ரொம்பவே கை கொடுக்கிறது. சாமி, சிங்கம் ,சிறுத்தை என மசாலா போலீஸ் படங்களின் மாஸ் ஹீரோக்கள், நான்கு கி,மீ தூரம் கேட்கிற மாதிரி, வாய் கிழிய ரவுடிகளிடம் கத்தி, பஞ்ச் டயலாக் பேசாமல், அண்டர் பிளே நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்தியிருகிறார் நந்தா.

தனது கடமையை துணிச்சலாகச் செய்தாலும், சமுக வீரோதிகள், மூத்த அதிகாரிகளின், துணையோடு அதையெல்லாம் முறியடிக்கும்போது, நொந்துபோகும் நேர்மையான அதிகாரியாக வீட்டுக்கு வந்து மனைவியிடம் அழும் அந்த ஒரு காட்சி சொல்லி விடுகிறது இது வழக்கமான போலீஸ் படம் இல்லை என்பதை! சரி!



ஹீரோதான் அமைதியாக நடிக்கிறார் என்றால் வில்லன்களும் யதார்த்ததில் எப்படியோ அதே குரூர அமைதியுடன் வருகிறார்கள். முக்கியாமாக பா. சிதம்பரத்தை நினைவூட்டும் அந்த மத்திய அமைச்சர் கதாபாத்திரத்தை துணிச்சலாக சித்தரித்த இயக்குனர் பாராட்டப் படவேண்டியவர்.

நம்ம குடும்பத்துல எல்லோருமே சுமையை தூக்கித்தான் பழக்கம், முதன் முதலா என் சுமையை ஒருத்தர் தூக்கிட்டு வர்றார் என்பது போன்ற நல்ல வசனங்களில், அடிப்படையில் நான் ஒரு ஒரு வசனகர்த்தா என்பதை நிரூபிக்கிறார்.

இதுபொன்ற அழுத்தமான கதையும் திரைக்கதையும் கொண்ட படங்களில் இசைக்கு முக்கிய பங்கு தேவை. சுந்தர்.சி பாபு மொத்தமாக கோட்டை விட்டு இருகிறார். மற்றபடி தற்போது வரும் போலீஸ் டைப் படங்களில் கதை போதலீங்க என்று புலம்பும் ரசிகர்களுக்கு யதார்தமான விருந்து இந்த வேலூர் மாவட்டம்!

1 comment: